சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில், மகிந்த கலந்துகொள்ளும் நிகழ்வு, அவர் விடுதியில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களின் பின்னரே இடம்பெற இருந்த போதிலும், பாதுகாப்பு அச்சம் காரணமாகவே அவர் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடாகும். அதேவேளையில் இரத்தக் கறைபடிந்த ஒருவரை அழைத்திருப்பதன் மூலம் தமது நிகழ்வின் தரத்தையும் பிரித்தானியா குறைத்துக்கொண்டுவிட்டதாக தமிழ்அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்கள் சிலர் எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்;டதுடன், இரு தரப்பிற்கும் இடையில் அவ்வப்பொழுது வாய்த் தர்க்கம் இடம்பெற்றது. சிங்களவர்கள் சிலர் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்ட எல்லைக்குள் நுழைந்து தாக்கவும் முற்பட்டனர். இவர்கள் பின்னர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, தமிழ் மக்களின் சிலரும் சிங்களவர்களின் ஆர்ப்பாட்ட எல்லையை அடைய முற்பட்டபோது காவல்துறையினரால் அவர்கள் தடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் சீருடை தரித்த இளைஞரும் இவர்களில் உள்ளடங்குவார்.
போர்க்குற்றம் புரிந்து, தமிழன அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் 6 ஆம் நாள் புதன்கிழமை மன்சன் அரங்கில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பேச இருப்பதால், இதன்போது தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட இருக்கின்றனர்.
அன்றைய தினம் காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானிய தமிழ் மக்களுடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்துவரும் தமிழ் உறவுகளும் இணைந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுவதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.



tirsdag, juni 05, 2012